செங்கம், டிச.22: செங்கம் அருகே நேற்று நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாமில் திருவண்ணாமலை ஆர்டிஓ வெற்றிவேல், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி பங்கேற்று 178 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார். செங்கம் அருகே மேல் வணக்கம்பாடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை தாங்கினார். துயர் துடைப்பு தாசில்தார் ஜெயபிரகாஷ், வட்ட வழங்கல் அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை ஆர்டிஓ வெற்றிவேல் கலந்து கொண்டு பேசினார். அதனைதொடர்ந்து, வருவாய்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 178 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை ஆர்டிஓ வெற்றிவேல் மற்றும் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோர் வழங்கினர். முன்னதாக விவசாயி ஒருவர் பேசிய கோரிக்கைக்கு அதே மேடையில் மேல்வணக்கம்பாடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கபடும் என எம்எல்ஏ கிரி அறிவித்தார். அதேபோல செங்கம் ஒன்றியத்தில் கிராம புறங்களில் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடம் கட்டி தரப்படும் என அறிவித்தார். உடன் நிகழ்ச்சியில் பிடிஓக்கள் பரிமேலழகன், ரபியூல்லா, மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் க.பிரபாகரன், ப.அண்ணாமலை, கூட்டுறவு சங்க தலைவர் முருகன், வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், வருவாய் ஆய்வாளர் நீலகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேரு, ரஞ்சித், செந்தில்குமார், ஆனந்த், பிரசாந்த், ராசுக்குட்டி, காண்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் அன்புமணி நன்றி கூறினார்.